.webp)
Colombo (News 1st) மாலைதீவுகளுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நாடு திரும்பினார்.
மாலைதீவு ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த விஜயம் அமைந்திருந்தது.
இந்த விஜயத்தின் போது, மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முய்சுவுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டதுடன் அந்நாட்டின் அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் அரச பிரதானிகளுடனும் ஜனாதிபதி கலந்துரையாடினார்.
இருதரப்பு, பிராந்திய, சர்வதேச விடயங்கள் தொடர்பில் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் இலங்கை - மாலைதீவு இடையேயான பரஸ்பர சட்ட உதவி வழங்கல் தொடா்பான ஒப்பந்தம், மாலைதீவு வெளியுறவு சேவை நிறுவனம் மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனத்திற்கிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகியன கைச்சாத்திடப்பட்டன.
மாலைதீவு மற்றும் இலங்கை இடையே இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதன் 60ஆவது ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் தலைநகரில் உள்ள சுல்தான் பூங்காவில் ஜனாதிபதி அனுர குமாரவினால் மரக்கன்று நடப்பட்டது.
இலங்கை - மாலைதீவு வர்த்தக பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்ட வர்த்தக சம்மேளனம் மற்றும் மாலைதீவுகளில் வசிக்கும் இலங்கை மக்களிடையேயும் ஜனாதிபதி உரையாற்றினார்.