Colombo (News 1st) தியத்தலாவை - ஃபொக்ஸ் ஹில் (Fox Hill) வாகன விபத்தில் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
விபத்தில் காயமடைந்த மேலும் 11 பேர் பதுளை மற்றும் தியத்தலாவை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரசிக குமார தெரிவித்துள்ளார்.
இதன்போது கடும் காயங்களுக்குள்ளான இருவர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே, தியத்தலாவை - ஃபொக்ஸ் ஹில் வாகன விபத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக இராணுவத்தினரால் 7 பேர் அடங்கிய குழு நேற்று (23) நியமிக்கப்பட்டது.
மேஜர் ஜெனரல் ஒருவரின் தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரசிக குமார தெரிவித்தார்.
சம்பவம் இடம்பெற்றமைக்கான காரணம், பொறுப்புக்கூற வேண்டியவர்கள், பார்வையிடுவதற்காக வருகை தந்தவர்களுக்கான பாதுகாப்பு உரிய முறையில் வழங்கப்பட்டதா போன்ற விடயங்கள் தொடர்பில் இந்த குழு ஆராயவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தியத்தலாவ விபத்து தொடர்பான அறிக்கை எதிர்வரும் மே மாதம் 10 ஆம் திகதி இராணுவத் தளபதியிடம் கையளிக்கப்படும் என இராணுவ ஊடகப்பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரசிக குமார தெரிவித்தார்.
கடந்த 21ஆம் திகதி தியத்தலாவையில் இடம்பெற்ற ஃபொக்ஸ் ஹில் கார் பந்தயத்தில் இடம்பெற்ற விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.