விமலுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு

விமல், கம்மன்பில, சுகீஷ்வர, திலித், அசங்க, மஹிந்த பத்திரனவிற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு

by Staff Writer 23-08-2026 | 3:59 PM

Colombo (News 1st) விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, சுகீஷ்வர பண்டார, திலித் ஜயவீர, அசங்க நவரத்ன மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர் மஹிந்த பத்திரன ஆகிய அரசியல் செயற்பாட்டாளர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.


கடந்த 05 ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கமைய குறித்த விடயங்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தேசிய புலனாய்வின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமைக்கு எதிராக கடந்த ஜூலை 7 மற்றும் 15 ஆம் திகதிகளுக்கு இடையில் இடம்பெற்ற சத்தியாக்கிரக போராட்டத்தின் போது, நீதிமன்ற நடவடிக்கைகளை விமர்சிக்கும் வகையில் பகிரங்கமாக கருத்து தெரிவித்த குற்றச்சாட்டிற்கமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதுதொடர்பான விசாரணைகளுக்கமைய, குற்ற புலனாய்வுத் திணைக்களம் கடந்த 5 ஆம் திகதி கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் விடயங்களை சமர்பித்தது.
இதற்கமைவாக குறித்த பிரதிவாதிகளின் கருத்துக்களினால் நீதிமன்ற நடவடிக்கை விமர்சிக்கப்பட்டுள்ளமை புலப்படுவதாக நீதவான் நீதிமன்றம் தீர்மானித்தது. 
இதன்படி, நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் குறித்த நபர்களுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் குற்றபத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.