நகை கொள்ளை: 3 பேர் கைது

ஒரு கோடி 75 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகை கொள்ளை: பிரதான சந்தேகநபர் உட்பட 3 பேர் கைது

by Staff Writer 23-08-2026 | 4:02 PM

Colombo (News 1st) சுமார் ஒரு கோடி 75 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் யாழ். கோப்பாய் பகுதியில் 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கடந்த முதலாம் திகதி சாவகச்சேரி பகுதியிலுள்ள நகை கடை உரிமையாளர் ஒருவரின் வீட்டில் இருந்து சுமார் 17 பவுண் தங்க நகைகள் காணாமல் போனமை தொடர்பில் கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


CCTV காணொளியின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய, பிரதான சந்தேகநபர் யாழ்ப்பாணம் நகரில் நேற்று (22) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


பிரதான சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் கோப்பாய் பகுதியில் 3 இடங்களிலும் வட்டுக்கோட்டை மற்றும் சாவகச்சேரி பகுதிகளிலுள்ள 5 வீடுகளிலும் தங்க நகைகளை சந்தேகநபர் கொள்ளையிட்டுள்ளமை தெரியவந்துள்ளது.


அத்துடன் கொள்ளையிடப்பட்ட 43 பவுண் தங்க நகைகள் ஊர்காவற்றுறையிலுள்ள வங்கி ஒன்றில் அடகு வைக்கப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.


மேலும், சந்தேகநபருக்கு உதவிய குற்றச்சாட்டில் ஊர்காவற்றுறையை சேர்ந்த 28 வயதான யுவதியும் கோப்பாய் பகுதியை சேர்ந்த ஆணும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


சந்தேகநபர்களை நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்ப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.