மஹர சிறைச்சாலை அமைதியின்மை : விசேட விசாரணை ஆரம்பம்

மஹர சிறைச்சாலை அமைதியின்மை : விசேட விசாரணை ஆரம்பம்

by Staff Writer 04-08-2026 | 9:04 AM

Colombo (News 1st) மஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் விசேட  விசாரணை ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த விசாரணைக்காக சிறைச்சாலையின் 3 சிரேஷ்ட  அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக மேலதிக சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜெனரல் பிரசாத் ஹேமந்த தெரிவித்தார்.

சிறைச்சாலையின் வெளிப்புற பாதுகாப்பிற்காக பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே, வெலிக்கடை மற்றும் கொழும்பு மெகசின் சிறைச்சாலைகளில் இருந்து மஹர சிறைச்சாலை கைதிகளுக்கான உணவு தொடர்ந்தும் கொண்டு செல்லப்படுவதாக சிறைச்சாலை ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

மஹர சிறைச்சாலையில் கைதிகள் குழுவொன்று கடந்த சனிக்கிழமையன்று சொத்துகளுக்கு சேதம் விளைவித்து அமைதியின்மையில் ஈடுபட்டதுடன், சிறைச்சாலை அலுவலகத்திற்கும் சேதம் விளைவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 104 கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர்.