நீதியமைச்சினால் விசாரணை

ஜனாதிபதி பொது மன்னிப்பை முறைகேடாக பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் நீதியமைச்சினால் விசாரணை

by Staff Writer 10-06-2025 | 2:30 PM

Colombo (News 1st) ஜனாதிபதி பொது மன்னிப்பை முறைகேடாகப் பயன்படுத்தி கைதியொருவரை விடுதலை செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் நீதியமைச்சினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பில் பிரத்தியேக விசாரணை நடத்தப்படும் என நீதியமைச்சர் ஹர்ஷன நாணாயக்கார தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அனுராதபுரம் சிறைச்சாலையின் அத்தியட்சகர் தவிர்ந்த ஏனைய அதிகாரிகள் இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய நேற்றிரவு(09) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார்.

நேற்று(09) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தை பணிநீக்கம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டது.

ஜனாதிபதி பொது மன்னிப்பை சட்டவிரோதமாக பயன்படுத்தி கைதியொருவர் விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பில் சிறைச்சாலைகள் செயற்பாட்டு ஆணையாளர் காமினி பி.திசாநாயக்க நேற்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்ததுடன் வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டது.

இதனிடையே, சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அனுராதபுரம் சிறைச்சாலையின் அத்தியட்சகர் மொஹான் கருணாரத்ன எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.