எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் ஆரம்பமானது

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான வாக்கெடுப்பு ஆரம்பமானது

by Staff Writer 26-10-2024 | 11:26 AM

Colombo (News 1st) எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான வாக்கெடுப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமானது.

எல்பிட்டிய பிரதேச சபை 55,643 வாக்காளர்கள் வாக்களிக்க  தகுதி பெற்றுள்ளதுடன் இவர்களுக்காக 48 வாக்களிப்பு மத்திய நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

இந்த தேர்தலினூடாக எல்பிட்டிய பிரதேச சபைக்காக 28 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

இதில் 08 கட்சிகள் மற்றும் ஒரு சுயேச்சைக் குழு உட்பட 279 பேர் போட்டியிடுகின்றனர்.

இன்று(26) மாலை 4 மணிவரை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

ஏதேனும் அவசர நிலைமைகள் ஏற்படுமாயின் அதனை எதிர்கொள்வதற்கான வேலைத்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளதாக காலி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி W.A தர்மசிறி தெரிவித்தார்.

நடைபெறுகின்ற எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் இடது கை பெருவிரலில் அடையாளம் இடப்படுகின்றமை விசேட அம்சமாகும்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் இடது கை சுண்டு விரலில் அடையாளம் இடப்பட்டதால் ஏற்படும் சிக்கல்களை தவிர்ப்பதற்காகவே தேர்தல் சட்டத்திற்கு அமைவாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வாக்காளரின் இடது கையில் பெருவிரல் இல்லாத பட்சத்தில் இடது கையின் சுண்டு விரல் தவிர்ந்த வேறு ஏதேனுமொரு விரலில் அடையாளமிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.