இந்தோனேஷியாவின் அமைச்சரவை பதவியேற்பு

இந்தோனேஷியாவின் மிகப்பெரும் அமைச்சரவை பதவியேற்பு

by Staff Writer 21-10-2024 | 4:21 PM

1966 ஆம் ஆண்டின் பின்னர் நியமிக்கப்பட்ட இந்தோனேஷியாவின் மிகப்பெரும் அமைச்சரவை இன்று(21) பதவியேற்றது.

இந்தோனேசிய முன்னாள் ஜனாதிபதி ஜொகோ விடோடோவின் (Joko Widodo) அமைச்சரவையில் 34 பேர் மாத்திரமே அங்கம் வகித்தனர்.

இந்தோனேசிய அரசியல் வரலாற்றில் இதற்கு முன்னர் 1966 ஆம் ஆண்டிலேயே இறுதியாக100க்கும் மேற்பட்டோர் அமைச்சரவையில் அங்கம் வகித்தனர்.

இந்நிலையில், புதிய ஜனாதிபதி ப்ரபோவோ சுபியன்டோ (Prabowo Subianto) தலைமையிலான புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று(21) பதவிப்பிரமாணம் செய்தது.

இதற்கமைய 48 அமைச்சுகளுக்காக புதிய ஜனாதிபதி நியமித்த அமைச்சரவையில் 109 அமைச்சர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

ஊழல், மோசடியற்ற நாட்டை உணவு மற்றும் எரிசக்தி துறைகளால் வளமானதாக மாற்றுவதற்கான அர்ப்பணிப்பை வழங்குவதே தமது இலக்கு என புதிய ஜனாதிபதி Prabowo Subianto பதவிப்பிரமாணத்தின் போது உறுதிமொழி வழங்கினார்.

நாட்டின் வருடாந்த பொருளாதார அபிவிருத்தியை 8 வீதம் வரை அதிகரிப்பதே புதிய ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும்.

பாதுகாப்பு செலவை அதிகரித்தல் மற்றும் சிவில் பணியாளர்களின் சம்பளத்தை அதிகரித்தல் என்பனவும் அவரது தேர்தல் வாக்குறுதியில் உள்ளடங்கிருந்தன.

83 மில்லியன் பாடசாலை மாணவர்களுக்கு இலவச உணவு விநியோகம் என்பது அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அனைவரையும் ஈர்த்த முக்கிய கொள்கையாகவும் காணப்பட்டது.