தேர்தல் பிரச்சார கூட்டங்களுக்கு மேலதிக பாதுகாப்பு

தேர்தல் பிரச்சார கூட்டங்களுக்கு மேலதிக பாதுகாப்பு ; விசேட போக்குவரத்து திட்டம் அமுல்

by Staff Writer 18-09-2024 | 3:15 PM

Colombo (News 1st) ஜனாதிபதி வேட்பாளர்கள் இன்று(18) நடத்தும் இறுதி பிரசார நடவடிக்கைகளுக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பை வழங்க நடவடிக்​கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, ஜனாதிபதி தேர்தல் தினத்தன்று மாலை 4 மணிக்கு பின்னர் முப்படையினரும் நாடளாவிய ரீதியில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸாருடன் இணைந்து செயற்படும் வகையில் அவர்கள் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளனர்.

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் முப்படையினர் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஜனாதிபதி தேர்தல் கடமைகளுக்காக நாளை(19) முதல் அதிகாரிகள் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதனிடையே, தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் இடம்பெறும் இடங்களை அண்மித்து விசேட போக்குவரத்து திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, தேர்தல் பிரச்சார கூட்டங்கள் இடம்பெறும் இடங்களை அண்மித்து சில வீதிகள் மூடப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.