4 பொலிஸ் அதிகாரிகளுக்கு ஆயுள் தண்டனை

பாரதிபுரம் படுகொலை வழக்கில் 4 பொலிஸ் அதிகாரிகளுக்கு 26 வருடங்களின் பின்னர் ஆயுள் தண்டனை

by Bella Dalima 27-04-2024 | 7:28 PM

Colombo (News 1st) தம்பலகாமம் - பாரதிபுரத்தில் இடம்பெற்ற ஆட்கொலைச் சம்பவமொன்றில் தொடர்புபட்டிருந்த நான்கு பொலிஸ் அதிகாரிகளுக்கு 26 வருடங்களின் பின்னர் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

ஆட்கொலை தொடர்பிலான சட்டவிரோத ஒன்றுகூடலின் பங்காளிகளாக இருந்தார்கள் என்ற குற்றசாட்டில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் நால்வருக்கு  ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

1998 ஆம் ஆண்டு திருகோணமலை பாரதிபுரத்தில் சேவையில் ஈடுபட்டிருந்த 4 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கே ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வட மத்திய மாகாண முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதியும் தற்போதைய குளியாப்பிட்டிய  மேல் நீதிமன்ற நீதிபதியுமான மனோஜ் தல்கொடபிட்டியவினால் இந்த தண்டணை வழங்கப்பட்டுள்ளது.

தம்பலகாமம் - பாரதிபுரம் கிராமத்தில் நிராயுதபாணியாக இருந்த 8 தமிழ் பொதுமக்கள் மீது ஒரு குழுவினர் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டு கொலை செய்தனர். குறித்த சந்தர்ப்பத்தில் அந்த இடத்தில் சட்டவிரோத ஒன்றுகூடலில் இருந்ததாக இந்த நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 4 பொலிஸ் அதிகாரிகளில், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பொலிஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் இரண்டு சார்ஜன்ட்கள் உள்ளடங்குகின்றனர்.

1998 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த ஒரு திகதியில் இந்த குற்றச்செயல் இடம்பெற்றுள்ளதாக பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.