விடுவிக்கப்பட்ட காணிகளுக்கான பாதைகள் திறப்பு

யாழ்ப்பாணத்தில் விடுவிக்கப்பட்ட 234.8 ஏக்கர் காணிக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான பாதைகள் திறப்பு

by Bella Dalima 10-05-2024 | 5:17 PM

Colombo (News 1st) யாழ்ப்பாணம் - தெல்லிப்பளை, ஒட்டகப்புலத்தில் அண்மையில் விடுவிக்கப்பட்ட 234.8 ஏக்கர் காணிக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான பாதைகள் திறக்கப்பட்டுள்ளன. 

குறித்த பகுதியில் இரண்டு வீதிகள் திறக்கப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் அலுவலகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொன்னாலை -  பருத்தித்துறை கடற்கரை வீதியில் பலாலி வடக்கு பாடசாலைக்கு அருகிலும், விமான நிலைய வீதியில் மருதடி சந்தியிலிருந்து பலாலி நோக்கி செல்லும் வீரப்பளை வீதியும் இவ்வாறு திறக்கப்பட்டுள்ளன. 

இதற்கு மேலதிகமாக விமான நிலைய வீதி ஊடாகவும், ஒட்டகப்புலம் பிரதான வீதியூடாகவும் விடுவிக்கப்பட்ட காணிகளுக்கு செல்ல ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
 
வசாவிளான் கிழக்கு (J/244), வசாவிளான் மேற்கு(J/245), பலாலி வடக்கு (J/254), பலாலி கிழக்கு (J/253), பலாலி தெற்கு (J/252) ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளுக்குட்பட்ட 234.8 ஏக்கர் காணி அண்மையில் விடுவிக்கப்பட்டது. 

இங்கு வசித்த 327 குடும்பங்கள் காணி உரிமை கோரி பதிவு செய்துள்ளதுடன், அவர்களில் 171 குடும்பங்களை சேர்த்தவர்கள் தமது காணிகளை அடையாளப்படுத்தி துப்பரவு செய்யும் பணிகளை ஆரம்பித்துள்ளனர்.