வறட்சியால் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு

வறட்சியால் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு

by Staff Writer 05-09-2026 | 8:08 AM

Colombo (News 1st) நிலவும் வறட்சியான வானிலையினால் 7 மாவட்டங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 15,534 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது. 
35,149 குடும்பங்களை சேர்ந்த மக்களே பாதிக்கப்பட்டுள்ளனர். 
நிலவும் வறட்சியான வானிலையினால் பாதிக்கப்பட்ட 34,608 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 13,354 பேருக்கு நீர் விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது. 
மொனராகலை மாவட்டத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மொனராகலை மாவட்டத்தில் 12,732 குடும்பங்களைச் சேர்ந்த 41,360 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 
இதேவேளை, எதிர்வரும் நாட்களில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை வேளையில் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவித்தார்.
எல்நினோ நிலைமையினால் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தின் 2ஆம் வாரத்தின் பின்னர் நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் வெள்ளம் ஏற்படுவதற்கான சாத்தியமுள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார். 
இதனிடையே, ஊவா, மத்திய, கிழக்கு மாகாணங்களிலும், முல்லைத்தீவு, பொலன்னறுவை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இன்று (05) பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 
சில பகுதிகளில் 75 மில்லிமீற்றர் பலத்த மழை பெய்யக்கூடுமெனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.