.webp)

Colombo (News 1st) உலகளாவிய ரீதியாக இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகின்ற முக்கிய பண்டிகையான ஈதுல் அல்ஹா எனப்படும் தியாகத் திருநாளான ஹஜ் பெருநாள் இன்றாகும்(28).
இறை தூதர்களில் ஒருவரான இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் இறுதிக் கடமையாக ஹஜ் கடமையாக்கப்பட்டுள்ளது.
பொருளாதார ரீதியாக வசதி படைத்த ஒருவர் தேக ஆரோக்கியத்துடன் இருந்தால் அவர் கட்டாயமாக புனித கடமையை நிறைவேற்ற வேண்டும் என்பது இஸ்லாத்தின் கட்டளையாகும்.
இறை தூதர்களில் ஒருவரான இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக இஸ்லாமிய நாட்காட்டியின் பிரகாரம் துல் ஹஜ் மாதம் பிறை 10 இல் ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுகின்றது.
வசதி படைத்த முஸ்லிம்கள் இஸ்லாத்தின் 5 முக்கிய கடமைகளில் இறுதி கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்காக புனித மக்கா சென்று மார்க்க கடமைகளில் ஈடுபட்டுள்னர்.
இற்றைக்கு சுமார் 4,000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த இறை தூதர் இப்ராஹிம் நபி அவர்களின் மனைவி மூலம் நீண்ட காலத்தின் பின்னர் கிடைத்த ஆண் மகனான இஸ்மாயில் நபியை இறை கட்டளையின் பிரகாரம் பலியிட துணிந்த வரலாறு இதன்போது நினைவு கூறப்படுகின்றது.
நபி இப்ராஹிம் அவர்கள் தமது அன்பிற்குரிய மகன் இஸ்மாயில் அலி ஸ்லாம் அவர்களை பலியிட துணிந்த போது, இறைவன் வானவர் ஜிப்ரி அலி சலாம் மூலம் அதனை தடுத்து ஒரு ஆட்டை இறக்கி வைத்து அதனை பலியிடுமாறு கட்டளையிட்டார்.
இறை தூதுவர் இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் இஸ்லாமியர்கள் புனித ஹஜ் பெருநாளை கொண்டாடுகின்றனர்.
புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தமது வாழ்த்துகளை பகிர்ந்துள்ளனர்.
நெருக்கடிக்கு மேல் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ள இவ்வுலகில், மனிதர்களுக்கிடையில் நிலவ வேண்டிய பிணைப்பின் மகத்துவத்தைப் பற்றிய பரந்ததொரு முன்மாதிரியை ஹஜ் பெருநாள் வழங்குவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட அந்தஸ்துகளுக்கு அப்பாற்பட்டு, உலகின் நாலாதிசைகளிலிருந்தும் வருகை தரும் அனைத்து முஸ்லிம்களும் ஒன்றிணைந்து மத வழிபாடுகளை நிறைவேற்றும் இந்த சந்தர்ப்பமானது, சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் குறித்த சிறந்ததொரு முன்மாதிரியை உலகிற்கு எடுத்துச்சொல்வதாக அவர் கூறியுள்ளார்.
சுயநலத்திற்கு பதிலாக பொதுநலம் மேலோங்கிய, அமைதியும் ஒற்றுமையும் நிறைந்த ஒத்துணர்வுள்ள மனித சமூகத்தை கட்டியெழுப்புவதே தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் நோக்கமாகும் என அவர் குறிப்பிட்டார்.
அந்த பயணத்தில் அமைதி, சகோதரத்துவம் மற்றும் தியாகத்தை பிரதிபலிக்கும் ஹஜ் பெருநாளின் வழிகாட்டல்களை எமது வாழ்க்கைக்கு மென்மேலும் நெருக்கமாக்கிக் கொள்ளுமாறு அனைவரிடமும் கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
ஆன்மீக விழுமியங்களால் இலங்கை சமூகத்தை மேலும் போஷித்து, அனைவருக்கும் பயன் கிடைக்கக்கூடிய அபிவிருத்தியடைந்த நாட்டை கட்டியெழுப்புவதற்காக சகோதரத்துவத்துடன் முன்னோக்கிச் செல்லுமாறு சகலருக்கும் அழைப்பு விடுப்பதாக தமது ஜனாதிபதி தமது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
தமக்கு சொந்தமான மிகவும் முக்கியமானதும் பெறுமதியானதுமானவற்றை கூட மனிதகுலத்தின் நன்மைக்காகவும் இறைவனின் விருப்பத்திற்காகவும் அர்ப்பணிக்கும் மனநிலையை ஹஜ் பெருநாள் உலகிற்கு எடுத்துரைப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
அனைவரும் எமக்கிடையிலான வேற்றுமைகளைக் கடந்து, சகோதரத்துவத்தையும் சகவாழ்வையும் கடைப்பிடித்து ஒற்றுமையாக செயற்படுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்த வேண்டும் என பிரதமர் கோரியுள்ளார்.
பலமான, அமைதியான, அதேநேரத்தில் சுபீட்சமான இலங்கையை கட்டியெழுப்பும் பயணத்திற்கு மிகச்சிறந்த முன்னுதாரணமாக அமைவதாக பிரதமர் தமது ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, குறுகிய வேறுபாடுகளைத் தவிர்த்து மற்றவர்கள் மீது கௌரவத்தையும் கருணையையும் வெளிப்படுத்தி அமைதியும் சகவாழ்வும் மிக்க சமூகத்தை கட்டியெழுப்ப அனைவரும் உறுதிபூண வேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார்.
