கெஹெலிய ரம்புக்வெல்ல பிணையில் விடுவிப்பு

கெஹெலிய ரம்புக்வெல்ல, ரமித் ரம்புக்வெல்ல பிணையில் விடுவிப்பு

by Staff Writer 03-06-2025 | 2:50 PM

Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரின் மகன் ரமித் ரம்புக்வெல்ல ஆகியோரை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இன்று(03) உத்தரவிட்டுள்ளார்.

தலா ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான 3 சரீரப்பிணைகள் மற்றும் தலா 50,000 ரூபா பெறுமதியான ரொக்கப்பிணையிலும் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கி அவர்களுக்கு வெளிநாட்டு பயணத்தடை விதித்த நீதவான் கடவுச்சீட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.

2021/2023ஆம் ஆண்டு காலப்பகுதியில் கெஹெலிய ரம்புக்வெல்ல ஊடகம், சுகாதாரம், சுற்றுலாத்துறை அமைச்சராக செயற்பட்ட போது 15 பேரை பெயரளவில் தனியார் ஊழியர்களாகப் பணியமர்த்தி அவர்களுக்கு வழங்கப்பட்ட சம்பளம் மற்றும் மேலதிக நேர கொடுப்பனவுகளை தனது தனிப்பட்ட செலவுகள் மற்றும் அரசியல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தியன் ஊடாக  அரசாங்கத்திற்கு 8 மில்லியன் ரூபாவிற்கும் அதிக நட்டம் ஏற்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.