.webp)
Colombo (News 1st) 2015 - 2016ஆம் ஆண்டு மத்திய வங்கியின் முறிகள் மோசடி தொடர்பில் பொதுவுடைமைகள் சட்டத்தின் கீழ் கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் பிரதிவாதியாக முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவை பெயரிடுவதற்கு சட்ட மாஅதிபர் எடுத்த தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்கி மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பை உயர் நீதிமன்றம் நீக்கியுள்ளது.
சட்ட மாஅதிபரால் முன்வைக்கப்பட்ட விசேட மேன்முறையீட்டு மனு தொடர்பில் தீர்ப்பை அறிவித்த போதே உயர் நீதிமன்றம் இதனை தெரிவித்துள்ளது.
எஸ்.துரைராஜா, ஜனக் டி சில்வா ஆகிய நீதியரசர்களின் இணக்கப்பாட்டுடன் உயர் நீதிமன்ற நீதியரசர் மஹிந்த சமயவர்தனவினால் இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.
அதன்படி முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவை குறித்த வழக்கின் பிரதிவாதியாக பெயரிடுவதற்கு சட்ட மாஅதிபர் எடுத்த தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்கி மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் வௌியிடப்பட்ட தீர்ப்பை நீக்குமாறும் அந்த தீர்ப்பு குறித்து ரவி கருணாநாயக்கவினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட எழுத்தாணை மனுவை தள்ளுபடி செய்வதாகவும் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
2015 ஜனவரி முதலாம் திகதி முதல் 2016 மார்ச் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கை மத்திய வங்கியில் முறிகள் விநியோகத்தில் ஏற்பட்ட முறைகேடு தொடர்பான முறைப்பாடு செய்யப்பட்டதுடன் இதனால் நாட்டின் பொருளாதாரத்திற்கு பில்லியன் கணக்கில் நட்டமேற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக தீர்ப்பை அறிவித்த நீதியரசர் மஹிந்த சமயவர்தன சுட்டிக்காட்டினார்.
இந்த செயற்பாட்டின் மூலம் தேசிய பொருளாதாரம் பாதிக்கப்பட்டதுடன் மக்கள் மத்தியிலிருந்த நம்பிக்கையும் இல்லாமல் போவதற்கு காரணமாக அமைந்ததாக அவர் கூறினார்.
2016 நவம்பர் 5ஆம் திகதி அவ்வேளையில் மத்திய வங்கியின் ஆளுநராக செயற்பட்ட கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமியினால் மேற்கொள்ளப்பட்ட எழுத்துமூல முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்தனர்.
அத்துடன் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய அவ்வேளையில் பதவியிலிருந்த ஜனாதிபதியால் ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவை சந்தேகநபராக பெயரிட்டு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
பின்னர் ரவி கருணாநாயக்கவை கைது செய்து ஆஜர்ப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.
தனக்கெதிராக பிடியாணை பிறக்கப்பிட்ட விதம் சட்டத்திற்கு முரணானது எனவும் அதனை செல்லுபடியற்றதாக்குமாறும் கோரி ரவி கருணாநாயக்க மேன்முறையீட்டு நீதிமன்றில் எழுத்தாணை மனுவை தாக்கல் செய்ததுடன் அதனை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான பிடியாணையை செல்லுபடியற்றதாக்கி ரிட் கட்டளையை பிறப்பித்தது.
அதனையடுத்து சட்ட மாஅதிபரால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முறிகள் கொடுக்கல் - வாங்கல் தொடர்பில் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட பிரதிவாதிகள் சிலருக்கு எதிராக மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
சட்ட மாஅதிபர் தன்னை பிரதிவாதியாக பெயரிடுவதற்கு எடுத்த தீர்மானம் சட்டத்திற்கு முரணானது என தெரிவித்து அதனை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி ரவி கருணாநாயக்கவினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுத்தாணை மனுவும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அதன்படி 2023 பெப்ரவரி 28ஆம் திகதி அந்த மனு தொடர்பான தீர்ப்பை அறித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் ரவி கருணாநாயக்கவை குறித்த வழக்கின் பிரதிவாதியாக பெயரிடுவதற்கு சட்ட மாஅதிபர் எடுத்த தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்கி ரிட் கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
அதன்பின்னர் அந்த மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக சட்ட மாஅதிபரால் உயர் நீதிமன்றத்தில் இந்த விசேட மேன்முறையீடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இது தொடர்பான நீண்ட விசாரணையை மேற்கொண்ட மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் ரவி கருணாநாயக்கவை பிரதிவாதியாக பெயரிடுவதற்கு சட்ட மாஅதிபர் எடுத்த தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்கி 2023 பெப்ரவரி 28ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பை கட்டணத்தின் கீழ் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
அதற்கு மேலதிகமாக இந்த விடயம் தொடர்பில் ரவி கருணாநாயக்கவினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள எழுத்தாணை மனுவையும் தள்ளுபடி செய்வதாக உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.