.webp)
Colombo (News 1st) புதிய பரிசுத்த பாப்பரசரை தெரிவு செய்வதற்கான முதல்சுற்று வாக்கெடுப்பு தீர்மானமின்றி நிறைவடைந்துள்ளது.
கத்தோலிக்க மக்கள் உள்ளிட்ட முழு உலகமும் கவனம் செலுத்தியுள்ள கொன்கிலேவ் எனப்படும் பரிசுத்த பாப்பரசரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு நேற்று(07) ஆரம்பமானது.
உலகளாவிய ரீதியில் இருக்கும் 252 கத்தோலிக்க கர்தினால்களில் 135 பேர் கூடி புதிய பாப்பரசர் ஒருவரை தெரிவு செய்யவதற்காக சிஸ்டைன் தேவாலயத்தில் நடந்த சிறப்பு பிரார்த்தனை கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
ஆராதனையைத் தொடர்ந்து கர்தினால்கள் இரகசிய வாக்கெடுப்பு இடம்பெறும் அறைக்குள் சென்றனர்.
புதிய பாப்பரசர் தெரிவு செய்யப்படும் வரையில் கர்தினால்கள் வௌி உலகத்துடன் எவ்வித தொடர்புகளையும் ஏற்படுத்த முடியாது.
நற்செய்தி கிடைக்கப்பெறும் வரையில் ஆயிரக்கணக்கான மக்கள் வத்திக்கானில் உள்ள சென் பீட்டர்ஸ் சதுக்கத்தில் கூடியிருந்தனர்.
வத்திக்கான் நேரப்படி நேற்றிரவு 9 மணியளவில் சிஸ்டைன் தேவாலயத்தின் கூரையில் உள்ள புகைபோக்கியில் இருந்து கறுப்பு புகை வௌியானது.
முதல் சுற்று இரகசிய வாக்கெடுப்பில் புதிய பாப்பரசர் தெரிவு செய்யப்படாமையை இது குறிக்கின்றது.
அதற்கமைய இரகசிய வாக்கெடுப்பு இன்றும்(08) இடம்பெறவுள்ளது.