கைதான சாமர சம்பத் தசநாயக்க விளக்கமறியலில்..

கைதான சாமர சம்பத் தசநாயக்க விளக்கமறியலில்..

by Staff Writer 27-03-2025 | 5:31 PM

Colombo (News 1st) கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஊவா மாகாண முதலமைச்சராக இருந்த போது அரச வங்கியொன்றிலிருந்து நிதியை கோரிய போது அதனை வழங்குவதற்கு வங்கி முகாமையாளர் மறுத்ததால் மாகாண சபை குறித்த வங்கியில் நடத்திச்சென்ற அனைத்து நிலையான வங்கிக்கணக்குகளையும் நீக்கிக்கொண்டதன் மூலம் அரசாங்கத்திற்கு 23 மில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் அவர் விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளார்.

வாக்குமூலமளிப்பதற்காக இன்று(27) முற்பகல் சென்றிருந்த போது பாராளுமன்ற உறுப்பினரை 3 குற்றச்சாட்டுகளின் கீழ் ஆணைக்குழு கைது செய்தது.

இரண்டு அரச வங்கிகளில் இருந்து இரண்டரை மில்லியன் ரூபா நிதியை ஊவா மாகாண சபைக்காக பெற்றுக்கொண்டு அந்த நிதியை சாமர சம்பத் தசநாயக்க நிதியத்தின் கணக்கில் வைப்பீடு செய்தமை அவற்றில் ஒரு குற்றச்சாட்டாகும்.

மற்றுமொரு வங்கியிடம் மாகாண சபைக்காக பெறப்பட்ட ஒரு மில்லியன் ரூபாவை முதலமைச்சராக இருந்த சாமர சம்பத் தசநாயக்க வங்கிக்கிளையில் நேரடியாக பெற்றுக்கொண்டமை மற்றைய குற்றச்சாட்டாகும்.