Colombo (News 1st) இலங்கை வரலாற்றில் ஒருபோதும் அழிக்க முடியாத, கறுப்பு கறைபடிந்து இன்றுடன்(23) 41 வருடங்களாகின்றன.
சமாதானத்துடனும் நல்லிணக்கத்துடனும் வாழ்ந்த இலங்கை மக்களை அரசியல் பேராசையால் பிளவுபடுத்தி, பேரவலம் நடந்தேறிய கறுப்பு ஜூலைக்கு இன்றுடன் 41 ஆண்டுகள்.
41 ஆண்டுகளுக்கு முன்னர் இதுபோன்றதோர் நாளில் ஆரம்பமான வன்முறை நமது சமூகத்தை பிளவுபடுத்தியது.
அன்று வன்முறையாளர்களால் நம் நாட்டின் அப்பாவி பொதுமக்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர். உயிர்கள், உடைமைகள் அழிக்கப்பட்டன.
இது இலகுவில் மறந்துவிடக்கூடியதொரு சம்பவம் அல்ல.
இதன் பின்னணி வரலாற்றில் இரத்த கறைபடிந்த ஈவிரக்கமற்ற அத்தியாயமாகவே உள்ளது.
எனினும், வரலாற்றை கூர்ந்து கவனித்தால் இதுவொரு சாதாரண நிகழ்வல்ல என்பது தௌிவாகப் புலப்படும்.
பல தசாப்தங்களாக, சுதந்திரத்தின் பின்னர் எமது நாட்டை வழிநடத்திய அரசியல்வாதிகள் எடுத்த தீர்மானங்களும் அவர்தம் நடவடிக்கைகளும் ஒற்றுமையாயிருந்த எமது சமூகத்தை பிளவுபடுத்தியதே இந்த அவலத்தின் பின்னணியாகும்.
இவ்வாறான அரசியல் தீர்மானங்களை எடுத்தவர்களின் குறுகிய நோக்கம் அன்று நிறைவேறியது.
அவர்களின் அதிகார இருப்பு உறுதியானது.
அவர்தம் குடும்பத்தினர் எமது நாட்டின் அரசியலில் தமது இருப்பை தக்கவைத்துக் கொண்டனர்.
ஆனால் நாட்டிற்கு என்ன நடந்தது? நாட்டு மக்கள் பிளவுபட்டனர்.
பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது.
ஆயிரக்கணக்கான அப்பாவி உயிர்கள் பலியாயின.
எனினும், இவ்வாறான அதிகாரப் பேராசை கொண்டவர்களுக்கு அடிபணியாமல் கறுப்பு ஜூலையின் காட்டுமிராண்டித்தனமான அதிகாரப்பிடியில் சிக்காமல் அதனை தோற்கடித்த உன்னதமானவர்களையும் நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.
சிறுபான்மையினர் வன்முறையை எதிர்கொண்டபோது இன, மத பேதங்களை மறந்து சகோதரர்களை, நண்பர்களை, அயலவர்களைக் காத்த மகோன்னதமானவர்கள் என்றென்றும் நினைவுகூரப்பட வேண்டியவர்கள்.
சீரிய தேசிய சிந்தனை மற்றும் சகோதரத்துவ உணர்வின் உந்துதலால் அன்று காப்பாற்றப்பட்ட உயிர்கள் இந்த நொடி வரை எமக்கு கற்பிக்கின்ற படிப்பினைகள் அர்த்தபுஷ்டியானவை.