அநுராதபுரம் விகாரையில் நிதி மோசடி

வௌிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி அநுராதபுரம் விகாரையில் நிதி மோசடி

by Bella Dalima 25-04-2024 | 4:59 PM

Colombo (News 1st) வௌிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி அநுராதபுரத்தை அண்மித்த விகாரையொன்றில் நிதி சேகரிப்பில் ஈடுப்பட்டமை தொடர்பான தகவல்கள் வௌியாகியுள்ளன. 

குறித்த விகாரையின் விகாராதிபதி மற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவரின் தலையீட்டுடன் இந்த செயற்பாடு இடம்பெற்றுள்ளதாக தொழிலாளர் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். 

இஸ்ரேலில் தொழில்வாய்ப்பு பெற்றுத்தருவதாகக் குறிப்பிட்டு, 700-க்கும் அதிகமானவர்களை விகாரைக்கு அழைத்து, பல்வேறு மருத்துவ அறிக்கைகளை பெற்றுக்கொண்டு பணம் திரட்டப்பட்டுள்ளது.

இந்த மோசடியில் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர், வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

அனுமதியளிக்கப்படாத வௌிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் தவிர்ந்த ஏனைய தரப்பினருக்கு பணம் பெற்றுக்கொள்ள அதிகாரம் இல்லை என அமைச்சர் மனுஷ நாணயக்கார இதன்போது தெரிவித்தார்.