சண்முகம் குகதாசனுக்கு அழைப்புக் கட்டளை

தமிழரசுக் கட்சி மாநாடு தொடர்பான வழக்கு: சண்முகம் குகதாசனுக்கு அழைப்புக் கட்டளை அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவு

by Bella Dalima 25-04-2024 | 6:04 PM

Colombo (News 1st) இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டிற்கு எதிராக யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இலங்கை தமிழரசுக் கட்சியின் மாநாட்டிற்கு எதிராக நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவு தொடர்பான வழக்கு இன்று யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஐந்தாவது எதிராளியான சண்முகம் குகதாசன் இன்றும் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், திருகோணமலையில் அவரது சரியான முகவரிக்கு  மீண்டும் அழைப்புக் கட்டளை அனுப்புவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன்போது, முதலாம் மற்றும் மூன்றாம் எதிராளிகள் தரப்பு சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி ந.ஶ்ரீகாந்தா  தங்கள் தரப்பு கருத்துகளை முன்வைக்க கால அவகாசம் வழங்குமாறு  கோரினார்.

இதனையடுத்து, எதிராளிகள் தமது சமர்ப்பணங்களை முன்வைக்க அவகாசம் வழங்கி ஜூன் 20 ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதேவேளை, இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு தொடர்பாக திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் மே 31 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது