Sulawesi: இந்தோனேசியாவின் சுலவெசி தீவில் நேற்று (17) எரிமலை ஒன்று பலமுறை வெடித்ததைத் தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதனையடுத்து, ஆபத்தான பகுதிகளில் இருந்து சுமார் 11,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
இரண்டு நாட்களுக்கு முன்பு சுலவெசி தீவில் உள்ள டானா டோராஜா என்ற இடத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 18 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், சுலவெசி தீவில் உள்ள Ruang என்ற எரிமலை 5 முறை வெடித்துச் சிதறியதாக இந்தோனேசியாவின் எரிமலை மற்றும் புவியியல் பேரிடர் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
ஆயிரக்கணக்கான அடி உயரத்திற்கு சாம்பல் படிந்திருக்கிறது. 2,378 அடி உயரமுள்ள Ruang எரிமலையில் இருந்து குறைந்தது 6 கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் செல்லுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது.
மேலும், எரிமலையின் ஒரு பகுதி கடலில் சரிந்து சுனாமியை ஏற்படுத்தக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டது.
கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தோனேசியாவின் அனக் க்ரகடாவ் எரிமலை வெடிப்பால் சுமத்ரா மற்றும் ஜாவா கடற்கரையில் சுனாமி ஏற்பட்டது. அதன் பின் மலையின் சில பகுதிகள் கடலில் வீழ்ந்து 430 பேர் பலியானமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இந்தோனேஷிய விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.
அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கங்களால் டெக்டானிக் அடுக்குகளில் ஏற்பட்ட தாக்கமே இந்த எரிமலை வெடிப்பிற்கு காரணம் என இந்தோனேசியாவின் எரிமலை மற்றும் புவியியல் பேரிடர் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.