இரு வேறு கொலை வழக்குகளில் 7 பேருக்கு மரணதண்டனை

கம்பஹா மற்றும் பலபிட்டிய நீதிமன்றங்களில் இருவேறு கொலை வழக்குகளில் 7 பேருக்கு மரணதண்டனை

by Staff Writer 18-07-2026 | 5:24 PM

Colombo (News 1st)கம்பஹா - அத்தனகல்ல பகுதியிலுள்ள வீடொன்றை உடைத்து ஒருவரை வெட்டிக் கொலை செய்து, மேலும் மூவரை காயப்படுத்திய சம்பவத்தில் குற்றவாளிகளான ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை மற்றும் 2 மகன்கள் உள்ளிட்ட 5 பேருக்கு கம்பஹா மேல் நீதிமன்றம் நேற்று (17) மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கம்பஹா மேல்நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலியினால் இந்த வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

அத்தனகல்ல - வௌகெதர பகுதியைச் சேர்ந்த ஐவருக்கே மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2011 ஒக்டோபர் 31ஆம் திகதி இரவு நிட்டம்புவ தியகாவிட்ட, வெலகெதர பகுதியிலுள்ள வீடொன்றை உடைத்து, அங்கிருத்தவர்களை கல் மற்றும் பொல்லால் தாக்கி, வாளால் வெட்டி இளைஞர் ஒருவரை கொலை செய்து மற்றும் மேலும் மூவருக்கு காயமேற்படுத்திய சம்பவம் தொடர்பில் இவர்களுக்கு எதிராக குற்றஞ் சாட்டப்பட்டிருந்தது.

நீண்ட வழக்கு விசாரணைகளின் பின்னர் முறைப்பாட்டில் பிரதிவாதிகளுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றசாட்டுகள் எவ்வித சந்தேகமுமின்றி நிரூபிக்கப்பட்டதையடுத்து நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதேவேளை, 2011ஆம் ஆண்டில் எல்பிட்டிய பகுதியில் ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காக இருவருக்கு பலபிட்டிய மேல் நீதிமன்றம் மரணதண்டனை விதித்துள்ளது.

அவ்வாறு மரணதண்டனை விதிக்கப்பட்டவர்கள், வஹுமபுரகே திலக் புஷ்ப குமார மற்றும் வீரதுங்க சமிந்த ஆகிய இருவராவர்.

சுமார் 15 வருடங்களாக நடைபெற்ற வழக்கு விசாரணையின் பின்னர் பலபிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி ருசிர வெலிவத்தவினால் இந்த தீர்ப்பளிக்கப்பட்டது.

ஏனைய செய்திகள்