தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்று(23)

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்று(23)

by Staff Writer 23-04-2026 | 6:20 AM

Colombo (News 1st) தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்று(23) நடைபெறுகின்றது.

திராவிட முன்னேற்றக் கழகம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காங்கிரஸ் மற்றும் இதர தோழமை கட்சிகளுடன் களம் காண்கின்றது.

நீண்ட காலமாக அதிமுக கூட்டணியில் இருந்த தேசிய முற்போக்கு திராவிடக் கழகம், இம்முறை ஒரு முக்கிய அரசியல் மாற்றமாக முதன்முறையாக திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்துள்ளது.

திமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிகவிற்கு 10 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், 2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இணைந்து களம் காண்கிறது.

அதிமுக இந்த முறை பாரதிய ஜனதா கட்சியுடன் மீண்டும் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

மொத்தமாகவுள்ள 234 தொகுதிகளில் அதிமுக 167 இடங்களில் நேரடியாகப் போட்டியிடுகிறது.

நடிகர் விஜய் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகம் 2026 சட்டமன்றத் தேர்தலில் மிக முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காது, தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது.

கட்சித் தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

தமிழக அரசியல் வரலாற்றில் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களின் ஆதரவை அதிகளவில் பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் இந்த தேர்தலில் பாரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி இம்முறையும் எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காது தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகின்றது.

கட்சி கொள்கையின் பிரகாரம் 234 தொகுதிகளில் 117 ஆண் வேட்பாளர்களையும் 117 பெண் வேட்பாளர்களையும் சமமாக சீமான் நிறுத்தியுள்ளார்.

இம்முறை தேர்தலில் 5.73 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன், இதில் 14 இலட்சம் பேர் முதல் தடவையாக வாக்களிக்கவுள்ளனர்.

மாநிலம் முழுவதும் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், வாக்குப்பதிவு நிறைவடைந்ததுடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 62 வாக்கெண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு எதிர்வரும் 04ஆம் திகதி வாக்குகள் எண்ணப்படவுள்ளன.

இன்று(23) காலை 07 மணி முதல் 06 மணி வரை வாக்குப்பதிவு இடம்பெறவுள்ளதுடன் வாக்குப்பதிவுகளை கண்காணிப்பதற்காக வாக்குச்சாவடிகளுக்குள்ளேயும் வௌியேயும் CCTV கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவை நேரடியாக கண்காணிப்பதற்கு 03 வகை கட்டுப்பாட்டு அறைகளை தேர்தல் அறைகளை தேர்தல் ஆணையம் நிறுவியுள்ளது.

தமிழகம் முழுவதும் சுமார் 1.40 இலட்சம் தமிழக காவல்துறை ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

தேர்தல் விதிமீறல்கள் குறித்து பொதுமக்கள் உடனுக்குடன் புகைப்படம் அல்லது காணொளி எடுத்து முறைப்பாடு செய்வதற்காக செயலி (C-Vigil App) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.