.webp)
-555553.jpg)
Colombo (News 1st) களுவாஞ்சிகுடி நீதிமன்றத்தின் முன்னாள் நீதவான் ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரை எதிர்வரும் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றம் இன்று(22) உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபரான முன்னாள் நீதவானுக்கு எதிராக குற்றவியல் நம்பிக்கை மோசடி செய்ததாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
களுவாஞ்சிகுடி நீதிமன்றத்தில் சில காலங்களுக்கு முன்னர் சந்தேகநபரான முன்னாள் நீதவான் கடமையாற்றிய காலப் பகுதியில் நீதிமன்றத்தின் களஞ்சியசாலையில் வைக்கப்பட்டிருந்த சில சான்றுப் பொருட்கள் காணாமல் போனமை தெரியவந்தது.
இது தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது நீதிமன்ற பதில் பதிவாளர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், முன்னாள் நீதவான் இன்று நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் அவரை எதிர்வரும் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு களுவாஞ்சிகுடி நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபரான முன்னாள் நீதவான் ஏற்கனவே நீதவான் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டிருந்தார்.
இதேவேளை, இன்று விளக்கமறியல் உத்தரவை வழங்கிய களுவாஞ்சிகுடி நீதவான், இந்த வழக்கிலிருந்து தாம் விலகிக்கொள்வதாக நீதிமன்றில் பகிரங்கமாக அறிவித்தார்.
வழக்கை விசாரிப்பதற்காக புதிய நீதவானை நீதிச்சேவை ஆணைக்குழு நியமித்த பின்னர், பிணை கோரிக்கையை முன்வைக்க முடியும் என நீதவான் தெரிவித்துள்ளார்.
