தனியார் ஊழியர்களுக்கு ETF வழங்க தீர்மானம்

பொது போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் துறை ஊழியர்களுக்கு ETF நன்மைகளை வழங்க தீர்மானம்

by Staff Writer 12-03-2026 | 7:52 AM

Colombo (News 1st) நாட்டில் பொது போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியார் துறை ஊழியர்களுக்கு ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியச்சபை என அழைக்கப்படும் ETF நிதியத்தின் ஊடாக நன்மைகளை வழங்குவதற்காக அரசாங்கத்தினால் புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பொது போக்குவரத்து சேவையை வெற்றிகரமாக முன்னெடுக்கும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

தனியார் பஸ், முச்சக்கர வண்டி மற்றும் வாடகை வாகனங்கள் உள்ளிட்ட அரச சார்பற்ற போக்குவரத்து துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட நலன்புரி நன்மைகள் வழங்கப்படவுள்ளன.

இந்த ஊழியர்களை, ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியச்சபையில் பதிவு செய்து அவர்களுக்கு நன்மைகளை வழங்குவதற்கான சட்ட வழிகாட்டல்கள் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளன.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் ஆலோசனைக்கமைய இந்த வழிகாட்டல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இதற்கான உத்தியோகபூர்வ புரிந்துணர்வு ஒப்பந்தம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியச்சபைக்கு இடையில் நிதியமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று(11) கைச்சாத்திடப்பட்டது.