இந்தியாவுடன் விளையாட பாகிஸ்தான் இணக்கம்

இந்தியாவுடனான போட்டியில் விளையாட பாகிஸ்தான் இணக்கம்

by Staff Writer 10-02-2026 | 3:12 PM

Colombo (News 1st) 2026 T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் எதிர்வரும் 15ஆம் திகதி இலங்கையில் நடைபெறவுள்ள இந்தியாவுடனான போட்டியில் பங்கேற்பதற்கு பாகிஸ்தான் இணங்கியுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப்புடனான தொலைபேசி கலந்துரையாடலின் போது போது ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க விடுத்த கோரிக்கைக்கு அமைவாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே நிலவும் நீண்ட கால நட்புறவு மற்றும் கிரிக்கெட் விளையாட்டில் இருநாடுகளுக்கு இடையே நிலவும் ஒத்துழைப்பு ஆகிய விடயங்கள் தொடர்பில் இருதலைவர்களுக்கு இடையே இதன்போது கருத்துகள் பரிமாறப்பட்டுள்ளன.

பாதுகாப்பு சவால்கள் காணப்பட்ட காலப்பகுதியில் 1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் உள்ளிட்ட பல்வேறு தொடர்களுக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டமை மற்றும் அண்மையில் பாகிஸ்தானின் பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு மத்தியில் இலங்கை தமது சுற்றுப்பயணத்தை இரத்து செய்யாது அந்நாட்டில் தங்கியிருப்பதற்கு மேற்கொண்ட தீர்மானம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இந்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த தொலைபேசி கலந்துரையாடலின் பின்னர் X வலைத்தளத்தில் பதிவொன்றை வௌியிட்ட பாகிஸ்தான் அரசாங்கம், இலங்கை ஜனாதிபதி முன்வைத்த கோரிக்கையை ஆராய்ந்த பின்னர் இந்தியாவுடன் இடம்பெறவுள்ள போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்குமென அறிவித்தது.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இந்த விடயம் தொடர்பில் தமது நன்றியை தெரிவித்து X வலைத்தளத்தில் பதிவொன்றை வௌியிட்டுள்ளார்.

அனைவராலும் விரும்பப்படும் கிரிக்கெட் விளையாட்டு தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லப்படுவதை உறுதி செய்வதிலும் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போட்டி திட்டமிட்டபடி நடைபெறுவதை உறுதி செய்வதிலும் தாம் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக ஜனாதிபதி அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

போட்டியின் இணை ஏற்பாட்டாளர் நாடு என்ற வகையில் சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கும் ஆதரவு வழங்கிய அனைத்து தரப்பினருக்கும் ஜனாதிபதி தமது X பதிவில் நன்றி தெரிவித்துள்ளார்.

1996ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கிண்ண தொடரின் போது பாதுகாப்பு காரணங்களுக்காக மற்றைய அணிகள் நாட்டிற்கு வருகை தருவதை தவிர்த்த போது கொழும்பில் போட்டிகளை விளையாடியதன் மூலம் இந்தியாவும் பாகிஸ்தானும் வௌிப்படுத்திய ஒத்துழைப்பை இலங்கை மறக்கவில்லை என்பதையும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தமது பதிவில் நினைவுகூர்ந்துள்ளார்.

இதனிடையே, இலங்கையின் கோரிக்கைக்கு அமைய சாதகமான பதில் வழங்கிய பாகிஸ்தான் பிரதமர், பாகிஸ்தான் வௌிவிவகார அமைச்சு மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை ஆகியோருக்கு தமது நன்றியை தெரிவிப்பதாக வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

வௌிவிவகார அமைச்சர் தமது X வலைத்தள கணக்கில் பதிவொன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.

விளையாட்டு கனவான் தன்மை, நட்புறவு மற்றும் தமது இருதரப்பு தொடர்புகளின் பலம் ஆகியன இதனூடாக பிரதிபலிப்பதாக வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள பங்களாதேஷ் அண்மையில் மறுப்பு தெரிவித்தது.

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் 09 கோடி இந்திய ரூபாவிற்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மானை தொடரிலிருந்து  நீக்குமாறு இந்திய அரசாங்கம் அந்நாட்டு கிரிக்கெட் சபைக்கு தெரிவித்ததை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

உலகக் கிண்ண தொடரில் இந்தியாவில் நடைபெறவிருந்த தமது அணிக்கான போட்டிகளை இலங்கையில் நடத்த வேண்டுமென பங்களாதேஷ் கிரிக்கெட் அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர். 

இருப்பினும், அறிவிக்கப்பட்ட போட்டி அட்டவணையை எக்காரணத்திற்காகவும் மாற்ற முடியாது என சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்தது.

இதனையடுத்து, சர்வதேச கிரிக்கெட் பேரவை, பங்களாதேஷை தொடரிலிருந்து நீக்கி ஸ்காட்லாந்தை இணைப்பதற்கு நடவடிக்கை எடுத்தது.

இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு, பாகிஸ்தான் உலகக் கிண்ண தொடரில் இருந்து விலகுவது குறித்து பரிசீலிப்பதாக அறிவித்தது.

பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் கிரிக்கெட் அதிகாரிகளுக்கு இடையே செயற்றிறனான  பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.

2026 உலகக் கிண்ண தொடர் மற்றும் தெற்காசிய கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்காமை தொடர்பில் பங்களாதேஷுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி எதிர்வரும் 15ஆம் திகதி கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இதற்காக விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதிகளவிலான இரசிகர்கள் போட்டிக்காக வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப். யூ. வூட்லர் கூறினார்.

இந்த நிலைமையை கருத்திற்கொண்டு பாதுகாப்பை பலப்படுத்தி விசேட வாகன போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.