.webp)
Colombo (News 1st) இலஞ்சம் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் வவுனியா - பூவரசன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காணி தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினையை தீர்த்து வைத்தல் மற்றும் அந்த காணியுடன் தொடர்புடைய செயற்பாடுகளை பிரச்சினைகளின்றி முன்னெடுப்பதற்காக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி 5 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக கோரியுள்ளார்.
இலஞ்ச பணத்தை பெற்றுக்கொண்ட சந்தர்ப்பத்தில் குறித்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அவரது உத்தியோகபூர்வ அலுவலகத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலஞ்சம் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் மகாவலி அதிகார சபை பிரிவொன்றின் முகாமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெலிகந்த பிரதேசத்தை சேர்ந்த நபரொருவர் வழங்கிய முறைப்பாட்டிற்கமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இராணுவ உறுப்பினர் என்ற அடிப்படையில் வீடொன்றை அமைப்பதற்காக மகாவலி அதிகார சபையினூடாக அதுகல பிரதேசத்தில் முறைப்பாட்டாளருக்கு 20 பேர்ச்சஸ் காணி வழங்கப்பட்டுள்ளது.
வழங்கப்பட்ட நிலம் சதுப்பு நிலமாக காணப்பட்டமையால் அதற்கு பதிலாக வேறொரு நிலத்தை வழங்குவதற்கு சந்தேகநபர் 20,000 ரூபா இலஞ்சம் கோரியுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.