நித்திய இளைப்பாறிய மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் கலாநிதி யோசப் பொன்னையா ஆண்டகையின் திருவுடல் நல்லடக்கம்

by Staff Writer 21-05-2025 | 7:49 PM

Colombo (News 1st) நித்திய இளைப்பாறிய மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் கலாநிதி யோசப் பொன்னையா ஆண்டகையின் திருவுடல் மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் இன்று(21) நல்லடக்கம் செய்யப்பட்டது.

மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் கலாநிதி யோசப் பொன்னையா ஆண்டகை கடந்த 2 வாரங்களுக்கு மேலாக சுகவீனமுற்றிருந்த நிலையில் கடந்த 19ஆம் திகதி தமது 74ஆவது வயதில் நித்திய இளைப்பாறினார்.

நித்திய இளைப்பாறிய கலாநிதி யோசப் பொன்னையா ஆண்டகையின் நல்லடக்க ஆராதனை மட்டக்களப்பு மரியாள் பேராலயத்தில் இன்று நடைபெற்றது. 


மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் கலாநிதி அன்டன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகை தலைமையில் கலாநிதி யோசப் பொன்னையா ஆண்டகையின் இறுதி நல்லடக்க ஆராதனை நடைபெற்றது. 

நல்லடக்க ஆராதனையில் வௌிமாவட்ட ஆயர்கள், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் உள்ளிட்ட பெருந்திரளான கத்தோலிக்கர்கள் இணைந்திருந்தனர். 


ஆராதனையின் பின்னர் மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் கலாநிதி யோசப் பொன்னையா ஆண்டகையின் திருவுடல், மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தினுள் உள்ள பலிபீடத்தில் அமைக்கப்பட்டிருந்த கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

2008 பெப்ரவரியில் திருகோணமலை - மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் துணை ஆயராக நியமிக்கப்பட்டு 2008 மே மாதம் ஆயராக திருப்பொழிவு செய்யப்பட்டார்.

2012ஆம் ஆண்டு மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் முதலாவது ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.