கட்டளையை மீறி பயணித்த முச்சக்கர வண்டி மீது துப்பாக்கி பிரயோகம் - இருவர் உயிரிழப்பு

by Staff Writer 23-04-2024 | 7:45 AM

Colombo (News 1st) மொரகஹஹேனை பிரதேசத்தில் கட்டளையை மீறி பயணித்த முச்சக்கர வண்டி மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மீகொட - தெல்கெட்டிய சந்தியில் இன்று(23) அதிகாலை 1.50 அளவில் பொலிஸ் வீதித்தடையொன்றில் முச்சக்கர வண்டியை சோதனையிடுவதற்காக நிறுத்த முயற்சித்த சந்தர்ப்பத்தில் அந்த முச்சக்கர வண்டியில் இருந்த நபர்கள் பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு விட்டு மொரகஹஹேனைக்கு தப்பிச்சென்றதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து மொரகஹஹேனை பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய, விசாரணைகளுக்காக அங்கு வந்த கொழும்பு தெற்கு குற்ற விசாரணைப்பிரிவு அதிகாரிகள் அந்த முச்சக்கர வண்டியை நிறுத்த முயற்சித்த சந்தர்ப்பத்திலும் முச்சக்கர வண்டி கட்டளையை மீறிப் பயணித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

அதற்கமைய, மொரகஹஹேனை - மீப்பே வீதியிலுள்ள டயர் தொழிற்சாலையொன்றுக்கு அருகில் வைத்து கொழும்பு தெற்கு குற்ற விசாரணைப்பிரிவு அதிகாரிகளால் குறித்த முச்சக்கர வண்டி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த இருவர் ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

முச்சக்கர வண்டியில் இருந்த மற்றுமொருவர் இதன்போது தப்பிச் சென்றுள்ளார்.

இந்த சம்பவத்தில் தனமல்வில பகுதியைச் சேர்ந்த 42, 35 வயதுகளை உடைய இருவரே உயிரிழந்துள்ளனர்.

முச்சக்கர வண்டியில் இருந்து துப்பாக்கியொன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.