இறையாண்மை பத்திர மறுசீரமைப்பு தொடர்பில் தௌிவுபடுத்தி நிதி அமைச்சு அறிக்கை

by Staff Writer 17-04-2024 | 6:13 PM

Colombo (News 1st) இலங்கை திருப்பிச் செலுத்தாத இறையாண்மை பத்திர மறுசீரமைப்பு செயல்முறை தொடர்பாக இதுவரை அடைந்துள்ள முன்னேற்றத்தை தௌிவுபடுத்தி நிதி அமைச்சு நேற்று (16) இரவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

பொருளாதாரம் மற்றும் நிர்வாகத்தின் செயல்திறன் அடிப்படையில் இறையாண்மை பத்திரங்களை மறுசீரமைக்க கடன் வழங்குநர்கள் முன்மொழிந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், இலங்கை தரப்பினர் கடன் இரத்து தொடர்பாக மார்ச் மாதம் முன்வைத்த பிரேரணைக்கு இறையாண்மை பத்திரம் வைத்திருப்பவர்கள் உடன்படவில்லை.

தமது கடன்களின் 28 வீதத்தை குறைத்தல் உள்ளிட்ட யோசனைகளை இலங்கை அரசாங்கம் பிணை முறி உரிமையாளர்களிடம் முன்வைத்திருந்தது. 

குறித்த யோசனைகளை நிராகரித்துள்ள பிணை முறி உரிமையாளர்கள், மேலதிக வட்டியுடன் குறித்த பிணை முறிகளை மீள விநியோகிக்கும் வேலைத்திட்டத்தை பரிந்துரைத்துள்ளனர். 

இதற்கமைய, தற்போது இலங்கை செலுத்த வேண்டிய 12.55 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகைக்காக மேலதிகமாக 1.6 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகையை செலுத்த நேரிடும். 

எவ்வாறாயினும், இலங்கையினால் பிணை முறி உரிமையாளர்களிடம் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள், சர்வதேச நாணய நிதிய விதிமுறைகளுடன் இணங்கிச் செல்வதுடன், பிணை முறி உரிமையாளர்களின் யோசனைகள் குறித்த விதிமுறைகளுக்குப் புறம்பாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனினும், கடன் மறுசீரமைப்புடன் தொடர்புடைய சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தைக் கைச்சாத்திடுவதற்கு முன்னதாக, கடன் வழங்குநர்களுடன் கலந்துரையாடி இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக நிதியமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.