தெற்காசியாவின் கல்வி மையமாக இலங்கை மாற்றப்படும்

தெற்காசியாவின் கல்வி மையமாக இலங்கை மாற்றப்படும்: உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் உறுதி

by Bella Dalima 09-09-2023 | 4:07 PM

Colombo (News 1st) நான்கு வருடங்களின் பின்னர் நாட்டில் கல்வி பொது தராதர உயர் தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் எண்ணிக்கை 63 வீதத்தால் அதிகரித்துள்ளதாக உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல், COVID தொற்று உள்ளிட்ட காரணங்களால் உயர் கல்விக்கு ஏதேனுமொரு வகையில் பின்னடைவு ஏற்பட்டிருந்ததாக அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், இம்முறை க.பொ.த உயர் தர பரீட்சையில் சித்தியடைந்த அனைத்து மாணவர்களையும் பல்கலைக்கழகங்களில் இணைத்துக்கொள்வதற்கான போதிய பௌதீக வளம் இல்லையென உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச தரத்திற்கு அமைவாக, பல்கலைக்கழகமொன்றில் 15 மாணவர்களுக்கு ஒரு விரிவுரையாளர் இருக்க வேண்டியது அவசியமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இலங்கையின் பல்கலைக்கழகங்களில் 30 மாணவர்களுக்கு ஒரு விரிவுரையாளர் என்ற கட்டமைப்பே காணப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

எனவே, உயர் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கும், பௌதீக வளங்கள் மற்றும் மனித வளங்களை மேம்படுத்துவதற்கும் கல்வி சீர்திருத்தம் முன்மொழியப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

பல்கலைக்கழக கல்விச் சீர்திருத்தத்தில், கலைப் பிரிவில் கற்கும் மாணவ, மாணவியரும் இளங்கலை விஞ்ஞானப் பட்டம் பெறும் வகையில் கல்வி முறை உருவாக்கப்பட வேண்டுமென உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உயர்தர விஞ்ஞானப் பாடங்கள் தொடர்பில் பாடசாலை ஆசிரியர்களுக்கு மேலதிகமாக தனியார் கல்வி நிலையங்களில் கற்பிக்கும் ஆசிரியர்களின் நேரத்தைப் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டமும் முன்மொழியப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

உயர் தரத்தில் சித்தியடைந்த அனைத்து மாணவர்களையும் பல்கலைக்கழகத்தில் இணைத்துக்கொள்ள வேண்டுமாயின், ஆய்வுக்கூடங்கள், விடுதிகளை நிர்மாணிப்பது உள்ளிட்ட பௌதீக வசதிகளை வழங்கவும் மனித வளங்களை மேம்படுத்துவதற்கும் இரண்டு ட்ரில்லியன் ரூபா தேவைப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு முழுமையான கல்வி சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமாயின், ஊழியர் சேமலாப நிதியத்தில் உள்ள தொகையில் சுமார் 50 வீதமளவில் நிதி தேவைப்படுமென மதிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, பொருளாதார ரீதியில் நெருக்கடியில் உள்ள ஒரு நாடு தற்போது இவ்வாறான பாரிய தொகையை ஒதுக்குவது சாத்தியமற்றது என்ற வகையில், உயர் கல்விக்கான சீர்திருத்தங்களை மேற்கொள்ளும்போது பல்வேறு மாற்று வழிகளைக் கையாள்வது குறித்து முன்மொழிவுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தெற்காசியாவின் கல்வி மையமாக இலங்கை மாற்றப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் இதனை தெரிவித்தார்.