.webp)
Mexico: வேற்றுகிரகவாசிகள் (ஏலியன்ஸ் - aliens) கண்காட்சியை நடத்தி மெக்சிகோ அரசு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பத்திரிகையாளரும் UFO ஆர்வலருமான Jaime Maussan மற்றும் தடயவியல் நிபுணர் Jose Zalce Benitez ஆகியோரால் மெக்சிகோ காங்கிரஸில் 2 வேற்றுகிரகவாசிகளை ஒத்த உடல்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
மனிதர்களைப் போல் அல்லாமல் மிகவும் சிறிய அளவில் 2 உடல்கள் ஒரு பெட்டியில் வைக்கப்பட்டு அனைவருக்கும் காண்பிக்கப்பட்டது. அவை இரண்டிலும் மூன்று விரல்கள் இருந்ததுடன், தலைகள் நீளமாக காட்சியளித்தன.
இந்த சடலங்கள் குறைந்தது 1,000 ஆண்டுகள் பழமையானவை என கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மெக்சிகோவில் நடந்த இந்த ஏலியன்ஸ் கண்காட்சி வேற்றுக்கிரகவாசிகள் மீதான ஆர்வத்தை மக்களிடம் மேலும் அதிகரித்துள்ளது.
அவை 2017 ஆம் ஆண்டில் பண்டைய நாஸ்கா கோடுகளுக்கு (Nazca Lines) அருகே பெருவில் மீட்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும், எச்சங்கள் பூமியில் உள்ள எந்த உயிரினத்துடனும் தொடர்புபட்டதாக தென்படவில்லை.
Nazca Lines எனப்படும் பிரம்மாண்ட ஓவியங்கள் ஏலியன்களால் வரையப்பட்டவை என்று சொல்லப்படுவதுண்டு. இது தொடர்பான பல்வேறு தகவல்கள் இணையத்தில் கிடைக்கின்றன.
கடந்த காலங்களில் இதேபோன்ற கண்டுபிடிப்புகள் மம்மி செய்யப்பட்ட குழந்தைகளின் எச்சங்களாக கருதப்பட்டுள்ளன.
இந்த எச்சங்கள் மீது X-ray, 3-D மற்றும் DNA பகுப்பாய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இதன்போது, குறித்த உடல்களுக்கும் மனிதர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை உறுதிப்படுத்த முடிந்ததாகவும் தடயவியல் நிபுணர் Jose Zalce Benitez குறிப்பிட்டுள்ளார்.
அவற்றுக்கு வலுவான, இலேசான எலும்புகள் இருப்பதாகவும் பற்கள் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், மெக்சிகோ தேசிய பல்கலைக்கழக ஆய்வாளர்கள் அந்த ஏலியன்களின் உடல்களில் முட்டைகள் இருந்ததை கண்டறிந்ததாகவும், உடல்களில் உள்ளிழுக்கக்கூடிய கழுத்து, பெரிய மூளைகள், பெரிய கண்கள் இருந்ததற்கான ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளனர்.
இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது. மெக்சிகோ ஆய்வாளர்களின் இந்த கருத்தை பல்வேறு ஆய்வாளர்கள் ஏற்கவில்லை.
இவை மனிதனால் உருவாக்கப்பட்டிருக்கலாம் எனவும் வேற்றுகிரகவாசிகளின் எச்சங்கள் அல்ல எனவும் சிலர் தெரிவித்துள்ளனர்.
பிரபஞ்சத்தில் பூமியில் இல்லாத வேறு உயிரினங்கள் உள்ளனவா என்பது குறித்த ஆய்வுகள் பன்னெடுங்காலமாக நடந்து வருகின்றன.
அது குறித்த தெளிவான முடிவுக்கு இன்னும் ஆய்வாளர்களால் வர முடியவில்லை.