.webp)

Colombo (News 1st) ஊர்காவற்றுறை - அல்லைப்பிட்டி சந்தியில் கட்டளையை மீறி பயணித்த வேன் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் 17 வயதான இளைஞர் உயிரிழந்துள்ளார்.
குறித்த வேன் பொலிஸாரின் கட்டளையை மீறி மண்டைதீவு நோக்கி பயணித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது வீதி தடைகளை சோதனை செய்வதற்காக அல்லைப்பிட்டி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இந்த சம்பவம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வேனை நிறுத்த பொலிஸாரின் ஜீப் முயன்ற போதிலும் நிறுத்தாமல் தப்பிச் சென்றதால் வான் நோக்கி துப்பாக்கிச்சூடு மேற்கொண்டு வேனை நிறுத்துவதற்கு முயற்சி எடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த வேன் சாரதி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
வட்டுக்கோட்டையை சேர்ந்த 17 வயது இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பவத்தின் போது வேனிலிருந்த மேலும் இருவர் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் மற்றும் யாழ். பிராந்திய குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
