24 மணித்தியாலங்களில் விபத்துகளில் 4 பேர் பலி

24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற விபத்துகளில் 4 பேர் பலி

by Staff Writer 07-09-2024 | 3:59 PM

Colombo(News1st) கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் நால்வர் உயிரிழந்தனர்.

பொத்துஹெர, குடாஓய, வாரியபொல மற்றும் முந்தல் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு - குருநாகல் வீதியின் கந்துருகும்புர பகுதியில் காரொன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் 30 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

தனமல்வில - வெல்லவாய வீதியில் தெள்ளுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 52 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அவர் செலுத்திய மோட்டார் சைக்கிள் லொறியுடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

வாரியபொல - புத்தளம் வீதியில் பம்பரகம்மன பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபை பஸ்ஸும் தனியார் பஸ்ஸும் மோதி விபத்துக்குள்ளானதில் இலங்கை போக்குவரத்து சபை பஸ்ஸின் மிதிபலகையில் பயணித்த ஒருவர் உயிரிழந்தார்.

மிதிபலகையில் பயணித்த மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

சிலாபம் - புத்தளம் வீதியில் பத்தளுஓயா பகுதியில் பாதசாரிகள் மீது கார் மோதியதில் பத்தளுஓயாவை சேர்ந்த 39 வயதுடைய ஒருவர் உயிரிழந்தார்.

கார் சாரதி காருடன் தப்பிச் சென்றுள்ளதுடன் அவரைத் தேடி விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.