பிங்கிரிய தொழிற்பேட்டை தொடர்பில் ஜனாதிபதி

பிங்கிரிய தொழிற்பேட்டை அபிவிருத்தி பணிகளை இவ்வருடத்திற்குள் நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி பணிப்புரை

by Staff Writer 09-05-2024 | 11:33 AM

Colombo (News 1st) பிங்கிரிய தொழிற்பேட்டையின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி பணிகளை இவ்வருட இறுதிக்குள் நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

பிங்கிரிய தொழிற்பேட்டையின் உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட ஏனைய கட்டுமானங்களின் முன்னேற்றம் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி செயலகத்தில் நேற்று(08) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

3 கட்டங்களின் கீழ் பிங்கிரிய தொழிற்பேட்டையின் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், முதல்கட்டப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

இந்தநிலையில், முழுமையான அபிவிருத்தி பணிகளையும் இவ்வருட இறுதிக்குள் நிறைவு செய்யுமாறு பணிப்புரை விடுத்துள்ள ஜனாதிபதி, அடுத்த மாதம் அந்த பணிகளை மேற்பார்வை செய்ய எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.