கொங்கிரீட் தூண் சரிந்து வீழ்ந்தமை குறித்து அறிக்கை

மத்திய அதிவேக வீதியில் கொங்கிரீட் தூண் சரிந்து வீழ்ந்தமை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு அறிவிப்பு

by Staff Writer 06-05-2024 | 2:56 PM

Colombo (News 1st) மீரிகம - கடவத்த அதிவேக வீதியின் ஒருபகுதி உடைந்து வீழ்ந்துள்ளமை தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு செயற்றிட்ட பணிப்பாளருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அதன் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.

கட்டுமானப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ள மத்திய அதிவேக வீதியின் கடவத்தை முதல் மீரிகம வரையிலான பகுதியின் பெம்முல்ல - கதஒலுவாவ பகுதியில் அண்மையில் கொங்கிரீட் தூண் சரிந்து வீழ்ந்துள்ளது.

இந்த பகுதிக்கு கொங்கிரீட் தூண்கள் இடும் செயற்பாடு 2021 ஆம் ஆண்டு நிறைவடைந்துள்ளதுடன், கொங்கிரீட் தூண் சரிந்து வீழ்ந்துள்ளமைக்கான காரணம் இதுவரை வௌியாகவில்லை. 

நிலவும் அபாய நிலையைக் கருத்தில் கொண்டு 17 கிலோமீட்டர் நீளம் கொண்ட வீதியில் காணப்படும் அனைத்து தூண்களின் தரம் தொடர்பிலும் ஆராய்வதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட்ட நிலையில் இந்த அதிவேக வீதியின் கட்டுமானப் பணிகள் அண்மையில் இடைநிறுத்தப்பட்டன.