நீதிமன்ற நடமாடும் சேவைகள் ஆரம்பம்

Online-இல் சந்தேகநபர்களை முன்னிலைப்படுத்தும் வகையில் நீதிமன்ற நடமாடும் சேவைகள் ஆரம்பம்

by Staff Writer 04-05-2024 | 3:08 PM

Colombo (News 1st) Online ஊடாக சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் வகையில், நீதிமன்ற நடமாடும் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அங்குனுகொலபெலஸ்ஸ, காலி, களுத்துறை ஆகிய இடங்களில் இந்த நீதிமன்ற நடமாடும் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சிறைச்சாலைகளில் 60 வீதமாக காணப்படும் அதிகாரிகள் பற்றாக்குறையால் ஏற்படும் சிக்கல்களுக்கு, இந்த திட்டத்தின் ஊடாக தீர்வு பெற்றுக்கொடுக்க முடியுமென நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ தெரிவித்தார்.

சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த அழைத்துச் செல்வதற்கான போக்குவரத்து செலவு பாரிய அளவில் காணப்படுவதோடு, அதற்காக பொதுமக்களின் பணமே பயன்படுத்தப்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தினமும் கைதிகளை நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்வதற்காக அதிகளவான அதிகாரிகள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.

பிணை தீர்மானிக்கப்படுவது மற்றும் விக்கமறியல் நீடிக்கப்படுவது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காகவும் கைதிகளை நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த சிக்கல்களை தவிர்ப்பதற்கு ஒன்லைன் ஊடான  நீதிமன்ற நடமாடும் சேவை திட்டம் பயனுள்ளதாக அமைவதோடு, கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் இந்த திட்டம் சிறந்ததாக அமையுமென நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ தெரிவித்தார்.