தற்போதைய பொருளாதார கொள்கையில் மாற்றம் ஏற்பட்டால் பழைய நிலைக்கு செல்ல நேரிடும்: மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை

by Bella Dalima 07-05-2024 | 7:20 PM

Colombo (News 1st) நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பொருளாதார கொள்கை மாற்றமடைந்தால் மீண்டும் பழைய நிலைமை ஏற்படலாம் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய வங்கியில் இன்று (07) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இது தொடர்பில் கருத்து தெரிவித்தார்.

நீடித்த ஸ்திரநிலை என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த ஊடக சந்திப்பில் புதிய மத்திய வங்கி சட்டத்திற்கு அமைய, மத்திய வங்கி அறிவித்துள்ள முதலாவது பொருளாதார விபரிப்பு தொடர்பில் தௌிவுபடுத்தப்பட்டது.

நாட்டின் பொருளாதாரம் படிப்படியாக  மீண்டும் வழமைக்கு திரும்புவதாக மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

IMF திட்டத்துடன் இணக்கம் காணப்பட்ட இலக்குகள் என்பது அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட செயற்றிட்டம் என சுட்டிக்காட்டிய ஆளுநர், அரசாங்கம் இணங்கியுள்ள குறித்த செயற்றிட்டத்தை தற்போதைய முறையில் தொடர்ந்தால் நிலையாக பேண முடியும் என தாம் அறிவித்துள்ளதாகவும் கூறினார். 

மக்களை தௌிவுபடுத்துவதற்காகவே இவ்விடயங்களைக் கூறுவதாகக் குறிப்பிட்ட மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க, 
தற்போதைய பொருளாதார கொள்கையில் மாற்றம் ஏற்பட்டால், மீண்டும் பழைய கடினமான நிலை ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளதாக தெரிவித்தார். 

தற்போது முன்னெடுக்கப்படுகின்ற கொள்கை எதிர்காலத்திலும் நடைமுறைப்படுத்தப்படுவது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.