ஏற்றுமதி பொருளாதாரத்தை உருவாக்குவதே நோக்கம்

ஏற்றுமதி பொருளாதாரத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

by Staff Writer 27-04-2024 | 6:36 PM

Colombo (News 1st) சந்தை பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டதும், அதிக போட்டித்தன்மை கொண்டதுமான ஏற்றுமதி பொருளாதாரத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நாட்டின் வர்த்தக சமூகம் மீது தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாகவும் ஜனாதிபதி கூறினார்.

தற்போது நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் முறைமையே நாட்டுக்கு அவசியமாவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நிறைவேற்று ஜனாதிபதி முறையை பேணுவதா, இல்லையா என்பது தற்போதைய பிரச்சினை அல்லவென தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்கால போக்கை தீர்மானிப்பதற்கான வாய்ப்பை மக்கள் இழந்துவிடக்கூடாதெனவும் அவர் வலியுறுத்தினார். 

நாம் எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும் எனவும் ஒரு அரசாங்கம் நியமிக்கப்பட்ட பிறகு ஒரு ஐந்தாண்டு திட்டம் முன்வைக்கப்படும் நிலையில், அந்த திட்டத்தின் படி அரசாங்கமே அனைத்தையும் வழங்குவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இவ்வளவு காலமும் திட்டங்கள் மாத்திரமே காணப்பட்டதால், மக்கள் இன்னும் வறுமையில் வாடும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். 

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (26) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.