.webp)
Colombo (News 1st) நிதி தூய்தாக்கல் தடுப்பு சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஸவின் பாட்டியான டேசி ஃபொரஸ்ட்டை வழக்கிலிருந்து விடுவிப்பதாக கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(25) அறிவித்தது.
மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கு விசாரணைகளை எதிர்கொள்வதற்கு பொருத்தமான மனநிலை டேசி ஃபொரஸ்ட்டுக்கு உள்ளதா என்பது தொடர்பில் கொழும்பு சட்டவைத்திய அதிகாரி ஊடாக பெறப்பட்டிருந்த விசேட மனநல வைத்திய அறிக்கை, சட்ட மாஅதிபர் சார்பில் ஆஜராகியிருந்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டாரவினால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
குறித்த மருத்துவ அறிக்கையை சமர்ப்பித்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, பிரதிவாதியினால் வழக்கு விசாரணைகளை எதிர்கொள்வதற்கு போதுமான மனநிலை இல்லையென வைத்திய நிபுணர் குழாத்தின் மூலம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதற்கமைய 02ஆவது பிரதிவாதியான டேசி ஃபொரஸ்ட்டுக்கு எதிரான வழக்கிலுள்ள முதலாம் மற்றும் மூன்றாம் குற்றச்சாட்டுகளில் இருந்து அவரை விடுவிப்பதாக ஜனக பண்டாரவினால் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டது.
இதனடிப்படையில் வழக்கின் முதலாவது பிரதிவாதியான யோஷித ராஜபக்ஸவிற்கு எதிரான திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து அவருக்கு எதிராக மாத்திரம் வழக்கு நடவடிக்கைகளை முன்கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்திற்கு தெரிவித்தார்.
விடயங்களை ஆராய்ந்த நீதிபதி, டேசி ஃபொரஸ்ட்டுக்கு எதிரான குற்றப்பத்திரிகையில் இருந்து அவரை விடுவித்து உத்தரவிட்டார்.
சுமார் 73 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை முறையற்ற விதத்தில் கையகப்படுத்தியமையின் ஊடாக நிதி தூய்தாக்கல் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றமிழைக்கப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டி யோஷித ராஜபக்ஸ மற்றும் அவரது பாட்டி டேசி ஃபொரஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்ட மாஅதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
