நாட்டிற்காக யாருடனும் இணைந்து செயற்படத் தயார்

நாட்டிற்காக யாருடனும் இணைந்து செயற்படத் தயார்: பசில் ராஜபக்ஸ தெரிவிப்பு

by Bella Dalima 10-05-2024 | 5:01 PM

Colombo (News 1st) நாட்டிற்காக யாருடனும் இணைந்து செயற்படத் தயார் என பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஸ தெரிவித்தார். 

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி தேர்தல் செயற்பாட்டு நிலையம் பத்தரமுல்லை ஜயந்திபுர மாவத்தையில் இன்று (10) திறந்து வைக்கப்பட்டது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஸ தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றதுடன், இதன்போது ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறினார். 

அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பிலும் அவரிடம் வினவப்பட்டதுடன், ஜனாதிபதி வேட்பாளர் தயார் என அவர் பதிலளித்தார். 

இன்றைய நிகழ்வில் தம்மிக்க பெரேராவும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டனர். 

இதேவேளை, ஜனாதிபதி தேர்தல் செயற்பாட்டு நிலையங்கள் தொகுதி மட்டத்திலும் திறக்கப்படவுள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு விரிவான பிரசாரப் பொறிமுறை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுஜன பெரமுன குறிப்பிட்டுள்ளது.