தேசிய கல்வியியற் கல்லூரியை மேம்படுத்த நிபுணர் குழு

தேசிய கல்வியியற் கல்லூரிகளின் தரத்தை மேம்படுத்த நிபுணர் குழு

by Staff Writer 04-04-2026 | 7:28 PM

Colombo (News 1st) தேசிய கல்வியியற் கல்லூரிகளின் தரத்தை மேம்படுத்தவும் அவற்றை மறுசீரமைக்கவும் நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் லியனகே அமரகீர்த்தி தலைமையிலான இந்த குழுவில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் அரோஷா அதிகாரம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பூபாலசுந்தரம் ஐங்கரன் மற்றும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட விரிவுரையாளர் பி.ஏ.டி அனில் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அரசாங்கத்தின் தேசிய கல்விக் கொள்கைகளுக்கு அமைவாக தேசிய கல்வியியற் கல்லூரிகளின் நிறுவன கட்டமைப்பையும் உள்ளடக்கும் வகையில் உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட மாணவர் நலன்புரி அபிவிருத்திக்கு தேவையான நடவடிக்கைகளை பரிந்துரைக்கும் நோக்கில் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, அரசாங்கம் எதிர்பார்க்கும் கல்வி மறுசீரமைப்பு இலக்குகளை அடையும் நோக்கில் ஆளுமை மற்றும் தலைமைத்துவப் பண்புகளை கொண்ட ஆசிரியர்களை உருவாக்கும் சூழல் தேசிய கல்வியற் கல்லூரிகளில் கட்டியெழுப்பப்பட வேண்டும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். 

கல்வியியற் கல்லூரிகளின் தரத்தை மேம்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் உறுப்பினர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைத் கூறியுள்ளார்.