Colombo (News 1st) முன்னாள் பிரதி அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் சரண குணவர்தனவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று(07) குற்றப்பத்திரிகை ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சந்தேகநபருக்கு 50,000 ரூபா மற்றும் 05 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் செல்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா அனுமதி வழங்கினார்.
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் முன்னிலையாகுமாறு விடுக்கப்பட்ட அறிவிப்பிற்கு அமைய முன்னாள் பிரதி அமைச்சர் நீதிமன்றில் இன்று(07) ஆஜராகினார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் மே மாதம் 4 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளன.
பிரதிவாதிக்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்குமாறும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சரண குணவர்தன அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக கடமையாற்றிய போது, லொத்தர் சபைக்கு தேவையான வாகனங்களை வாடகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளும் போது முறையான நடைமுறைகளை பின்பற்றாமை காரணமாக அரசாங்கத்திற்கு சுமார் 9 இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்படுத்தியதாக கூறி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.