75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 1000 ரூபா நாணயக்குற்றி வௌியீடு

by Bella Dalima 02-02-2023 | 5:16 PM

Colombo (News 1st) இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 1000 ரூபா நாணயக்குற்றி ஒன்று இலங்கை மத்திய வங்கியினால் வௌியிடப்பட்டுள்ளது. 

முதலாவது நாணயக்குற்றி கண்டியில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் வைத்து மத்திய வங்கி ஆளுநரால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இன்று கையளிக்கப்பட்டது. 

இலங்கை மத்திய வங்கியினால் வௌியிடப்படும் 71 ஆவது ஞாபகார்த்த நாணயக்குற்றி இதுவாகும். 

பொதுமக்கள் பாவனைக்கு விடப்படாத இந்த நாணயக்குற்றி மார்ச் மாதம் முதல் பொதுமக்களின் கைகளுக்கு கிட்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கையின் தேசியக் கொடி நாணயத்தின் நடுவில் பொறிக்கப்பட்டுள்ளதுடன்,  "75" என்ற இலக்கமும் அதில் பொறிக்கப்பட்டுள்ளது. 

''சுதந்திரக் கொண்டாட்டம்''  (“Independence Commemoration” ) என்ற சொல் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் நாணயத்தில் பொறிக்கப்பட்டுள்ளதும் சிறப்பம்சமாகும்.